Thursday, June 11, 2015

கேழ்வரகு / Raagi / ஆரியம், கேவுரு, ராகி, கேப்பை

கேழ்வரகு அடை!!
தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப

செய்முறை:-
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போட்டு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.
வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து கொதிநீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரத்துணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை துணியின் உதவியோடு அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும். சூடான சூப்பர் கேப்பம் அடை ரெடி..!!

++++++++++++++++++++++++++++++++++

கேழ்வரகு
அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற  தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான்.  அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?
ஆரியம், கேழ்வரகுகேவுரு, ராகி, கேப்பை... இப்படிப் பல  பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில்  அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும். இட்லி, தோசை, இடியாப்பம் என நெல்  அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும்  செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான  தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத்  தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது, சரி சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது... உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக்  காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான்  இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால்,  எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம்.  ''கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும்,  தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான  தொடர்பு உடை யது கேழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு  காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக்  கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு,  தேன்கனிக்கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60  வகைகள் இருக்கின்றன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி  பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே  கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல்  இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது''  அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட  கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம்.  பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும்,  அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு. ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ  உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல  தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும்  அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.
குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை  ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும். ஆந்திர மாநிலத்தில் வறுமையில்  பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான  கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள  மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகளுக்கு  இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி  உணவாகக்  கொடுத்து வந்தனர்.  ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல்  எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ''மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான  ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும்  கிடையாது'' என்றார்கள் அந்த அமைப்பினர்.
கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்தானாம். அதிக விலை  இல்லாத ஊட்ட தானியமான இது தான் இன்று வரை வறுமை யில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற  ஆப்பிரிக்க நாட்டின் பிர தான உணவு. இன்றைய ஒலிம்பிக்கில் கால்பந்திலும் ஓடுகளப் போட்டிகளில் வில் எனப் பறக்கும் வேகத்துக்கும் கேழ்வரகின் கால்சியமும், அதில் உள்ள  அமினோ அமிலங் களும்கூட காரணம் என்றால் அது  மிகை யாகாது.
கேழ்வரகில் 'மித்தியானைன் எனும் ஒரு முக்கிய அமினோ  அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம்.  தனியாக இந்த 'மித்தியானைன் புரதம் குறித்த ஆய்வுகள்  இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக்  கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியானைன்  அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த 'மித்தியானைன்கொண்ட கேழ்வரகு பெரிதும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன் கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன் புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றனஆய்வு கள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன் உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம்... சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல  நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?
இந்த கேழ்வரகு என்ற ராகியில் உள்ள சத்துக்கள்
புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் -70.
அரிசியில் உள்ள சத்துக்கள்
புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் -0.
ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி.  சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும்  கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான  சத்துக்கள் மறைந்துள்ளன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற                       சிறுதானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும்  எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை  சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து,  உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத்  திகழ்கிறது.
இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்  ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி  வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட  அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை  அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில்  செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும்  கொண்டுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.
ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி.  சிறுதானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும்  கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர்  இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர்  சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.
இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம்  கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை  நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.
உடலுக்கு வலிமை தரும்
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய  ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி  சிறு குழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது  நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.  இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும்  திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.
கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம்  ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி  ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி  குறைவாக எடுக்கும்.
உஷ்ணத்தை குறைக்கும்:-
ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை  தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின்  கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில்  அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது  வாடிக்கையாக உள்ளது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால்  நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட்  செய்தும் சாப்பிடலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கூழ் குடிக்க
தமிழ் மாதங்கள், 12க்கும், ஒவ்வொரு சிறப்பை, நம் முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். அதனால் தான், பல மாதங்களையும் குறிப்பிட்டு, பல பழமொழிகளும் பவனி வருகின்றன. முக்கியமாய் இந்த ஆடி மாதம், மிக சிறப்பானதாக, பல கூறுகளிலிருந்து கூறப்படுகிறது. 
எதனால், இந்த ஆடி மாதம் சிறப்பானது என்று தெரிந்து கொள்ள ஆராய்ச்சி செய்தால், பல சுவையான, அறிவியல் பூர்வமான, ஆரோக்கியம், உணவு, உறவு தொடர்பான பல சங்கதிகள், ஆன்மிக விஷயங்களோடு வரிசைக் கட்டி நிற்கின்றன.
அறிவியல் தொடர்பானவை
ஆடி மாதத்தில் தான், சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணத்தை துவங்குகிறது. ஆடியில் துவங்கும் தட்சிணாயனம் காலத்தில், சூரியனிடம் இருந்து வெளிப்படும் கதிர்கள், விவசாயத்திற்கு உகந்ததாகும். பகல் பொழுது குறைந்தும், இரவு நீண்டும் இருக்கும். காற்றும், மழையும், ஈரப் பசையும் அதிகமாக காணப்படும். சூரியனிடமிருந்து சூட்சும சக்திகள் அதிகமாய் வெளிப்படும். பிராண வாயு அதிகமாய் கிடைப்பதும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ளதும், இந்த மாதத்தில் தான். சூரியனின் தாக்கம் குறைவாக உள்ள, இந்த மாதத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வருகின்றன. சந்திரனின் குளிர்ச்சி சூரியனை 
குளிர்விக்கிறது; வெய்யில் தாக்கம் குறைகிறது. 
சூரியனை விட, சந்திரனுக்கே  ஆதிக்க நிலை வந்து விடுவதால், நம்மை குளிர்விக்கிறது.
ஆரோக்கியம் தொடர்பானவைநிறைய இயற்கை மாற்றங்கள் அதிகமாக நடப்பது ஆடி மாதத்தில் தான். அறிவியல் காரணங்களால் காற்றும், அதன் மூலம் ஈரப் பசையும் அதிகம் என்பதால், காற்றில் விதைகள் பரவுவது போல, நோய் கிருமிகளும் அதிகமாய் உற்பத்தியாகி பரவும். 
அதனாலேயே சளி, இருமல் அதிகமாய் தொற்றும். 
மருத்துவமனைகளில் இந்த மாதம் சிகிச்சைக்கு போவோர் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும். வீட்டு பெரியவர்களிடம் கேளுங்கள். அவர்கள் காலத்திலெல்லாம் அம்மை வியாதி எப்படி, எந்த காலக் கட்டத்தில் அதிகமாய் இருந்தது என்று!  கண்டிப்பாக, இந்த ஆடி மாதத்தில் தான், அம்மை கண்டவர்கள் அதிகம் இருந்திருப்பர். சூரிய கதிர்களின் திசை மாற்றத்தினால் உடல் சூடு அதிகரித்து, பெருகி வரும் வைரஸ் கிருமிகள், சூடேறிய உடலைத் தாக்கி, அம்மை நோயை உருவாக்குகிறது. காற்று மிக வேகமாய் இருப்பதனால், அம்மைக்கு காரணமான வைரஸ் கிருமிகள் எளிதாகவே பரவி, ஒரு உயிர் கொல்லி நோயாகவே இருந்தது. மருத்துவ தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுவிட்ட இந்தக் காலத்திலும், அம்மை நோய்க்கு மருந்து என்று ஒன்றும், தனியாக கண்டுபிடிக்க முடியவில்லை. வரும் முன் காக்கும் நடவடிக்கைகளே பின்பற்றப்படுகிறது.
பொருளாதார ரீதியானவை
ஆடி மாதத்தில் விதை விதைத்தால், அமோகமான விளைச்சல் இருக்கும் என்பதும், நம் நம்பிக்கை. இதுவும் சும்மா சொல்லப்படவில்லை. அனுபவ ரீதியாக பெற்ற அறிவின் மூலமே கூறப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில், தமிழக ஆறுகளில் நீர் வரத்து அதிகமாய் இருக்கும். இப்போது விதைத்தால் தை மாதம் அறுவடை செய்யலாம்.
தொடர்ந்து பண்டிகைகளும் வர ஆரம்பித்துவிடும். மக்கள் கைகளில் வசதி இருக்கும் இந்த சமயத்தில் நகை, நிலம், வீடு என்று எது வாங்கினாலும் பெருகும் என்பதற்கான காரணமும் இதுதான்.
உறவு ரீதியானவை:-
ஊரில் மக்கள் எல்லாரும் மகிழ்ந்தாலும், புதுமண தம்பதியை பிரித்து, பெண் வீட்டார் பெண்ணை மட்டும் அழைத்துப் போய் விடுவதால், அவர்கள் மட்டும் இந்த ஆடி மாதம் வந்தாலே சுணக்கமாகி விடுவர். இதற்கும் எல்லாருக்கும் தெரிந்த காரணம் தான் ஆடியில் இணைந்த தம்பதியருக்கு மருத்துவக் கணக்குபடி சித்திரையில் பிரசவம் ஆகும். கடுமையான வெயில் காலம் என்பதால் தாய்க்கும், சேய்க்கும் பல நோய்கள் வர வாய்ப்பு ஏற்பட்டு விடும்.  மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத காலத்தில், நம்  பெரியவர்களுக்குத் தோன்றிய முன் யோசனை இது.
உணவு ரீதியானவை:-
அறிவியல் படி, நம் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியப் படி வைரஸ் அதிகமாய் பரவி நோய் தொற்று அதிகமாகக்கூடும். உறவு ரீதியாக தனிமை என்ற வெறுமையும் சேர்ந்துக் கொள்ளும். ஆனால், பொருளாதார ரீதியாக வளமாய் இருப்போம். 
இத்தனை தொல்லைகளிலிருந்து தப்பிக்கதான், ஆடி மாத சிறப்பான கேழ்வரகு கூழ் செய்து சாப்பிடும் பழக்கத்தை, நம் முன்னோர் ஏற்படுத்தினர். நம் ஆரோக்கியத்திற்காகவும், நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட விஷயங்களை மட்டும், நாம் பழமை, மூடத்தனம் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். அதில் இந்த கூழ் குடிக்கும் பழக்கமும் ஒன்று.
கூழ் குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சக்தியை தரக்கூடிய ஈஸ்ட் நுண்ணுயிர், கூழில் அதிகம். கூடவே கொடுக்கப்படும் முருங்கைக் கீரையும் சேர்ந்து, நமக்கு இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவற்றை தாராளமாகவே தருகிறது.
ஆன்மிக ரீதியானவை:-
இப்படி ஆடி மாத சிறப்பை சொல்லி, நம் நல்லதுக்கு தான் என்றும் எடுத்துச் சொல்லி கேழ்வரகு கூழ் சாப்பிடச் சொன்னால், கண்டிப்பாய் நாம் குடிப்போமா? மாட்டோம்! அதனால், கண்டுபிடித்தஒரு சடங்கு, வழக்கம் தான் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது. 
அதில் கட்டும் வேப்பிலையும், மஞ்சளும் கிருமிநாசினியாக செயல்படும்.
இவ்வளவு சிறப்பான ஆடி மாதத்தில், பின் ஏன் வீட்டு விசேஷங்கள் எதுவும் செய்வது இல்லை?
கோவில் விழா, சடங்கு, ஆரோக்கியம் என, பொது நல வேலைகளே அதிகம் இருப்பதால், அதற்கு வீட்டு விசேஷங்கள் தடையாக, இடையூறாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக தான், ஆடி மாதம் வீட்டில் விழா எடுப்பதை தவிர்த்தனர், நம் பெரியோர்!

ஆடி பதினெட்டு, ஆடிப்பூரம், அவ்வை நோன்பு, ஆடி பவுர்ணமி, ஆடி வெள்ளி இப்போது ஆடித்தள்ளுபடி என, தமிழகமே விழாக் கோலம் கொண்டிருக்கும் இந்த நாட்களில், கண்டிப்பாய் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம், கேழ்வரகு கூழ் குடிப்போம்.'பழக்கமில்லையே...' என்று நாகரிகம் காட்டி ஒதுக்கி விடாமல் இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்த கேழ்வரகு, முருங்கைக் கீரை போன்றவற்றை, அன்றாட உணவிலாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதை, வெறும் சடங்காக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அம்மனுக்கு கூழ்தான் ஊற்றணுமா... பெப்சி, கோக் ஊத்துனா அம்மன் குடிக்காதா என்று, சினிமா வசனம் பேசாமல், உடனே கிளம்புங்கள் கூழ் குடிக்க!

No comments:

Post a Comment